பர்மாவில் பெரும் நிலநடுக்கம், குறைந்தது 12 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, நவம்பர் 11, 2012

பர்மாவின் மத்திய பகுதியை பெரும் நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.


பர்மாவின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாய் நகரில் இருந்து 120 கிமீ வடக்கே 10 கிமீ ஆழத்தில் இன்று காலை உள்ளூர் நேரம் 07:42 மணிக்கு 6.8-அளவு நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


சுவெபோ நகரில் புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்தன. அதில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐந்து கட்டடப் பணியாளர்களைக் காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். தங்கச் சுரங்கம் ஒன்றும் சேதத்துக்குள்ளாகியதில் அதில் அகப்பட்டு சிலர் கொல்லப்பட்டனர்.


தாய்லாந்தின் பாங்கொக் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.


2011 மார்ச் மாதத்தில் பர்மாவில் லாவோசு, தாய்லாந்து எல்லைப் புறத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு