குர்ஆன் எரிப்பு: ஆப்கானித்தானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பலர் உயிரிழப்பு

ஞாயிறு, ஏப்பிரல் 3, 2011

ஐக்கிய அமெரிக்காவில் கடந்த மாதம் இசுலாமியர்களின் புனித நூல் குர்ஆன் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானித்தானின் கண்டகார், மற்றும் ஜலலாபாத் ஆகிய நகர வீதிகளில் பல நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் நேற்று ஈடுபட்டனர்.


புனித குர்ஆன் நூலின் முகப்பு

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இதே போன்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஏழு ஐக்கிய நாடுகள் ஊழியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.


ஆப்கானித்தானில் தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மார்ச் 20 இல் குர்ஆனை எரித்த புளோரிடா கிறித்தவ மதகுருவே பொறுப்பெடுக்க வேண்டும் என ஐநா உயரதிகாரி ஸ்டப்பான் டி மிஸ்தூரா தெரிவித்தார்.


கடந்த மார்ச் 20 ஆம் தேதி புளோரிடாவைச் சேர்ந்த வெயின் சாப் என்பவர் "மனிதத்துக்கு எதிரான குற்றம்" எனக்கூறி புனித நூலை எரித்திருந்தார்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு