தேர்தல் 2010: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 13 இடங்கள்

வெள்ளி, ஏப்பிரல் 9, 2010

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


இலங்கையில் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வட, கிழக்கு மாகாணம் வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது

இம்முடிவுகளின் படி இந்த மாவட்டங்களின் மொத்தமள்ள 27 உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) மொத்தமாக 12 பேரும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 10 பேரும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 5 பேரும் தெரிவாகியுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டம்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 65,119 வாக்குகளைப் பெற்று 5 இடங்களைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 47,622 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 12,624 வாக்குகளைப் பெற்று 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.


யாழ் .மாவட்டத்தில் இருந்து மாவை சேனாதிராசா , சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன் ஆகியோர் தமிழரசுக் கட்சி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி மாவட்டம்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 41,673 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,522 வாக்குகளைப் பெற்று 2 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 12,783 வாக்குகளைப் பெற்று 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 66,235 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 62,009 வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 22,935 வாக்குகளைப் பெற்று 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணி 13189 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

திகாமதுல்லை (அம்பாறை) மாவட்டம்

அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 132,096 வாக்குகளைப் பெற்று 4 இடங்களைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 90,757 வாக்குகளைப் பெற்று 2 இடங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 26,895 வாக்குகளைப் பெற்று 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை தேர்தல் மாவட்டத்துக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஆனாலும், உத்தியோகப்பற்ற முறையில் வெளியான முடிவுகளின் படி இலங்கைத் தமிழரசுக் கட்சி 1 இடத்தையும் (இரா. சம்பந்தன்), ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 இடத்தையும் பெற்றுள்ளது.

மூலம் தொகு