சாட் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வி, நால்வர் உயிரிழப்பு

வெள்ளி, மே 3, 2013

சாட் நாட்டில் அரசுத்தலைவர் இதிரிசு தேபி ஆட்சிக்கு எதிராக அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற குழு ஒன்றின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் அறிவித்துள்ளன.


இரண்டு இராணுவத் தளபதிகள், ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு மாதங்களாக சிறு குழு ஒன்று ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தலைநகருக்கு வெளியே துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. குறைந்தது மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தலைநகர் ஞாமீனாவில் அமைதி நிலவுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சாட் நாட்டில் அடிக்கடி இராணுவப் புரட்சிகளும், கிளர்ச்சிகளும் இடம்பெற்று வந்துள்ளன. இதிரிசு தேபி 1990 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றையடுத்து பதவிக்கு வந்தவர். 1960 ஆம் ஆண்டில் சாட் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. வடக்கே பெரும்பான்மையாக வாழும் அரபு-முசுலிம்களுக்கும், பெரும்பான்மையாக வாழும் கிறித்தவர்களுக்கும் இடையே அடிக்கடி கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன.


கிழக்கு சாடைச் சேர்ந்த போராளிகளின் தாக்குதல்களில் இருந்து 2006, 2008 ஆம் ஆண்டுகளில் இதிரிசு தேபி உயிர் தப்பியிருந்தார். கிழக்கு சாட் போராளிகளுக்கு சூடானிய அரசு உதவி வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மூலம் தொகு