கினி-பிசாவு நாட்டில் இராணுவப் புரட்சிக்கு இராணுவத்தினர் முயற்சி

வெள்ளி, ஏப்பிரல் 13, 2012

மேற்கு ஆப்பிரிக்காவின் கினி-பிசாவு நாட்டில் இராணுவத்தினர் தலைநகரின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி இராணுவப் புரட்சி ஒன்றுக்கு முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பிசாவு நகரிலும், பிரதமர் கார்லொசு கோமசுவின் இருப்பிடத்தை சுற்றியும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. தேசிய வானொலி, மற்றும் ஆளும் கட்சியின் பணிமனையையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். ஆனாலும் இராணுவத்தினர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.


கடந்த மாதம் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் கோமசு வெற்றி பெற்றிருந்தாலும், அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. இதனால் தேர்தல்கள் இன்னும் முடிவுறாமல் உள்ளன. இரண்டாம் கட்டத் தேர்தல் எப்ரல் 29 ஆம் நாளுக்கு ஏற்பாடாகியிருந்தது. கோமசு, மற்றும் இடைக்கால அரசுத்தலைவர் ரைமுண்டோ பெரெய்ரா ஆகியோர் தற்போது எங்கிருக்கின்றனர் எனத் தெரியவில்லை.


மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியக் கூட்டமைப்பான எக்கோவாஸ் இந்த இராணுவப் புரட்சியைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளது.


1974 ஆம் ஆண்டில் போர்த்துக்கலிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் கினி-பிசாவு நாட்டில் பல முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 2009 இல் அரசுத்தலைவர் நீனோ வியெரா சுட்டுக் கொல்லப்பட்டார். இலத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு போதைப்பொருள் கினி-பிசாவு ஊடாகவே கடத்தப்பட்டு வருகிறது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு