இந்தோனேசியாவில் குறுகிய நேரத்தில் ஆறு நிலநடுக்கங்கள்

சனி, ஏப்பிரல் 21, 2012

இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் நேற்று வெள்ளி இரவும் இன்று சனி அதிகாலையும் சில மணி நேரத்தில் பல தடவைகள் நிலநடுக்கங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.


பப்புவா மாகாணத்தின் வடக்குக் கரையில் இன்று 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் 29.8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இதனை அடுத்து 10 நிமிட நேரத்தில் அதே இடத்தில் 5.6 அளவு நிலநடுக்கம் 27.6 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். மேலும் நான்கு 5.2 முதல் 5.7 வரையான நிலநடுக்கங்கள் வடக்கு சுமாத்திராவின் மேற்குக் கரையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளன.


இந்த நிலநடுக்கங்கங்களால் உயிரிழப்புகளோ அல்லது பெருமளவு சேதங்களோ இடம்பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.


பசிபிக் எரிமலை வளையத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்தோனேசியாவில் ஆண்டொன்றுக்கு ரிக்டர் அளவில் 4.0 அல்லது அதற்கு மேற்பட்ட 6,000 முதல் 7,000 வரையான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 2004 திசம்பரில் இடம்பெற்ற 9.0 நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக தென்கிழக்காசியாவில் 230,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் உயிரிழந்தனர்.


மூலம் தொகு