இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் நிலநடுக்கம், 22 பேர் உயிரிழப்பு

புதன், சூலை 3, 2013

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் மேற்கு முனையில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று நிகந்த 6.1 அளவு நிலநடுக்கத்தின் விளைவாக குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். இருநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். வீடுகள் பல தரைமட்டமாகியுள்ளன, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.


ஆச்சே மாகாணத்தின் மத்திய பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் 6 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளனர் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இராணுவத்தினரும், காவல்துறையினரும் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.


அச்சே மாகாணத் தலைநகர் பண்டா ஆச்சே முதல் பெனெர் மெரியா வரையான பகுதிகளில் 15 வினாடிகளுக்கு நில்கநடுக்கம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


2004 டிசம்பரில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையில் இங்கு மட்டும் 230,000 பேர் உயிரிழந்தனர்.


இந்தோனேசியா பசிபிக் எரிமலை வளையத்தில் காணப்படுவதால் இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.


மூலம் தொகு