வங்காள தேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்தது

சனி, நவம்பர் 28, 2009

வங்காள தேசத்தின் தெற்குப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற பயணிகள் படகொன்று மூழ்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலரைக் காணவில்லை என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


"எம்வி கொக்கோ-4" என்ற பயணிகள் கப்பல் போலா தீவில் உள்ள லால்மோகன் என்ற நகரின் கரையோரத் துறைமுகத்தை நெருங்கும் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றியதாலும், தரையிறங்கும் பயணிகளின் கனத்தைத் தாங்காமலேயே கப்பலின் ஒரு பகுதி நீரினுள் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 10 பேர் இறந்ததாகவும் பலர் கப்பலின அடியில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர்களைத் தேடும் பணி ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.


இதுவரையில் 50 பேர் வரையில் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பயணிகளில் பெரும்பாலானோர் டாக்காவில் இருந்து தியாகத் திருநாளைக் கொண்டாட தமது ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர்.

மூலம் தொகு