போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்

ஞாயிறு, நவம்பர் 22, 2015

1971 ஆம் ஆண்டில் பாக்கித்தானுடனான விடுதலைப் போரின் போது குற்றங்கள் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சலாகுதீன் காதர் சௌத்ரி, அலி முகம்மது முஜாகிது ஆகிய இரண்டு வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலையில் தலைநகர் டாக்காவில் தூக்கிலிடப்பட்டனர்.


வங்காளதேசத்தின் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. 1971 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஆளும் அவாமி லீக் தலைமையிலான வங்க அரசு இந்த சிறப்பு நீதிமன்றத்தை 2010 மார்ச் மாதத்தில் அமைத்தது.


சலாகுதீன் காதர் சவுத்திரிக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, அவற்றில் ஒன்பது குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இனப்படுகொலை, கடத்தல், சிறுபான்மையின இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இந்துக்கள் பலரை கட்டாயமாக இசுலாமிய மதத்துக்கு மதம் மாற்றியமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. ஆனால் அவர் இக்குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்,


மூலம் தொகு