பொதுநலவாயப் போட்டி: சீருடற்பயிற்சிக்கான தங்கத்தை பிரசாந்த்தின் ஆத்திரேலிய அணி பெற்றது

செவ்வாய், அக்டோபர் 5, 2010

ஆஸ்திரேலியாவின் சீருடற்பயிற்சி ஆண்கள் அணி பொதுநலவாயப் போட்டிகளில் தமது முதலாவது தங்கத்தை இன்று தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மையத்தில் பெற்றுக் கொண்டது.


ஆஸ்திரேலிய அணியில் ஜோசுவா ஜெபெரிசு, பிரசாந்த் செல்லத்துரை, சாமுவேல் ஒஃபோர்ட், லூக் விவட்டோவ்ஸ்கி, தொமசு பிச்லர் ஆகியோர் தங்கப் பதக்கத்தைப் பெற்றனர். இவ்வகைக்கான தங்கப் பதக்கங்களை முன்னதாக கனடா அணி நான்கு முறையும், இங்கிலாந்து அணி இரண்டு முறையும் பெற்றது.


நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மெல்பேர்னில் இடம்பெற்ற போட்டிகளில் ஆத்திரேலிய அணி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.


"சீருடற்பயிற்சி வரலாற்றில் இது மிகவும் முக்கிய நாள். விளையாட்டுக்களைத் தொடங்குவதற்கு இது உந்துசக்தியாக விளங்கும், என ஜெபெரிசு தெரிவித்தார்.


இங்கிலாந்து அணி வெள்ளிப் பதக்கத்தையும், கனடா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றது.


இவ்வணியில் பங்குபற்றி தங்கப்பதக்கத்தை வென்ற பிரசாந்த் செல்லத்துரை 1986 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து சிட்னிக்குக் குடி பெயர்ந்தனர்.


மூலம்