பிரபல நடன ஆசிரியை சரசா காலமானார்

புதன், சனவரி 4, 2012

தமிழ்நாடு, சென்னை மந்தைவெளியில் சரசாலயா நடன பள்ளியை நடத்தி வந்த கே. ஜே. சரசா (72) நேற்று முன்தினம் காலமானார்.


முதல்வர் ஜெயலலிதா நடிக்க வரும் முன்பும், நடிகையான பின்பும் இவரிடம்தான் நடனம் கற்றுக் கொண்டார். பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கும் ஆரம்ப நாட்களில் நடன ஆசிரியை இவரே. நடன இயக்குநர் ரகுராம், நடிகை ஷோபனா உட்பட பல பிரபலங்கள் இவரிடம் நடனம் பயின்றுள்ளனர். பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும் 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.


சரசாவுக்கு நேற்று முன்தினம் காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். சரசா கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. இவர் தனது தங்கை சீதாவின் மகள் ராஜலட்சுமியைத் தத்தெடுத்து வளர்த்தார். ராஜலட்சுmi முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி ஆவார்.


சரசாவின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில் எனது பரதநாட்டிய குருவான சரசா மறைவு கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவு நாட்டியக் கலையில் ஈடுபட்டுள்ளோருக்கு பெரிய இழப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.


மூலம் தொகு