பக்ரைன் குண்டுவெடிப்புகளில் இருவர் உயிரிழப்பு

திங்கள், நவம்பர் 5, 2012

பக்ரைனில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


பக்ரைன் தலைநகர் மனாமாவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மொத்தம் ஐந்து குண்டுவெடிப்புகள் இன்று திங்கட்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளன. குதாய்பியா என்ற இடத்தில் குண்டு ஒன்று வெடித்தபோது அருகில் இருந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் திரைப்பட மாளிகை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இறந்தவர்கள் இருவரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது.


ஆத்லியா என்ற இடத்தில் இடம்பெற்ற மேலுமொரு குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார். இன்று வெடித்த குண்டுகள் அனைத்தும் வீடுகளில் தயாரிக்கப்பட்ட சிறியரகக் குண்டுகள் எனக் கூறப்படுகிறது.


சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்படும் பொருட்கள் எதனையும் தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


நாட்டில் பாதுகாப்பு வழமைக்குத் திரும்பும் வரை நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக சென்ற வாரம் பக்ரைனின் உட்துறை அமைச்சு அறிவித்ததை அடுத்தே வன்முறைகள் ஆரம்பித்ததாக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.


மூலம் தொகு