ஜெய்ப்பூரின் கடைசி மகாராஜா பவானி சிங் காலமானார்

திங்கள், ஏப்பிரல் 18, 2011

மேற்கு இந்திய மாநிலமான ராஜஸ்தானில் ஜெய்ப்பூரின் 40வது கடைசி மகாராஜாவாக இருந்த பிரிகேடியர் சவை பவானி சிங் தனது 79வது அகவையில் நேற்று அரியானாவில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.


1966-ல் இளவரசி பத்மினி தேவியை பவானிசிங் மணந்தார். இவர்களுக்கு திவ்ய குமாரி என்ற ஒரே மகள் உள்ளார். மகாராஜா இரண்டாம் சவை மான்சிங் 1970 ஆம் ஆண்டில் இறந்ததை அடுத்து அவரது மகன் பவானி சிங் மகாராஜாவானார். ஆனாலும் இவர் பதவியேற்ற சில நாட்களில் அரச வம்சப் பதவிகள் இல்லாமல் ஆக்கப்பட்டன.


பவானி சிங் இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். குடியரசுத் தலைவரின் பாதுகாப்பாளராக இருந்தார். 1971-ல் நடைபெற்ற இந்திய-பாக்கித்தான் போரின் போது பாகித்தானின் சிந்து பகுதியின் எல்லைக்குள் படையுடன் புகுந்து எதிரிகளைத் தாக்கியுள்ளார். இவருக்கு பரம்வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. 1974-ல் பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றார்.


1989-ல் மக்களவைத் தேர்தலில் ஜெய்புரான் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மகாராஜாவின் இறப்பை முன்னிட்டு ராஜஸ்தான் மாநில அரசு இரண்டு நாள் துக்கம் அனுட்டிக்கிறது.


மூலம் தொகு