செர்பியப் போர்க்குற்றவாளி மிலாடிச் மீதான வழக்கு ஆரம்பம்

வியாழன், மே 17, 2012

1992-95 காலப்பகுதியில் இடம்பெற்ற பொசுனிய உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்ததாக ஐக்கிய நாடுகளினால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொசுனிய-செர்பிய இராணுவத் தலைவர் ராட்கோ மிலாடிச் மீதான வழக்கு விசாரணைகள் நேற்று நெதர்லாந்தில் த ஹேக்கில் அமைக்கப்பட்டுள்ள 'முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்' ஆரம்பமானது.


1995 ஆம் ஆண்டில் செரெபிரெனிக்காவில் ஏழாயிரத்திற்கும் அதிகமான 7,500 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு இவரே பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுக்கள் 'பயங்கரமானவை' என்று 70 வயதாகும் மிலாடிச் கூறியுள்ளார்.


மிலாடிச்சுக்கு எதிரான வழக்கு பற்றிய ஒலி-ஒளி ஆவணப் பதிவொன்று வெளியிடப்பட்டது. முதல் நாள் விசாரணையின் போது ஜெனரல் மிலாடிச்சு பொசுனியாவில் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என வழக்குத் தொடுநர்கள் வாதிட்டனர்.


தலைநகர் பெல்கிரேடில் வாழ்ந்து வந்த மிலாடிச் 2001 ஆம் ஆண்டில் முன்னாள் யூகொசுலாவிய அரசுத்தலைவர் சிலபடான் மிலொசேவிச் கைது செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவானார். சென்ற ஆண்டு மே மாதத்தில் இவர் செர்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.


மூலம் தொகு