சுவீடன் நாட்டுக் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

வெள்ளி, அக்டோபர் 7, 2011

சுவீடன் நாட்டுக் கவிஞர் தோமசு திரான்சிட்ரோமருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


தோமசு திரான்சிட்ரோமர்

அவருடைய கவிதைகள் உண்மையிருப்பைத் தனித்தன்மையாக, செறிவான, ஊடுருவிக் காட்டும் தன்மையதாகவும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. உண்மையிருப்பைப் புதுக்கண்ணோட்டத்துடன் காண ஓர் அணுக்கம் தருவதாக எண்ணுகிறார்கள். சுவீடன் தலைநகர் இசுட்டாக்கோமில் நோபல் பரிசு குழுவினால் நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இவரது கவிதைகள் ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1974 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோபல் பரிசு பெறும் முதலாவது சுவீடியர் இவராவார். ஏப்ரல் 1931 பிறந்த இவர் 1956 ஆம் ஆண்டில் உளவியலில் பட்டம் பெற்றார். தனது 23 வது அகவையில் முதலாவது தொகுதிக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.


80 வயதான தோமசு திரான்சிட்ரோமர் இலக்கியத்திற்கான நோபல் விருதை வெல்லும் 108வது நபர் ஆவார். 10 மில்லியன் சுவீடியக் குரோனர்கள் இவர் பரிசாகப் பெறுவார். உளவியல் நிபுணரான இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்துள்ளார்.


இந்த ஆண்டு இலக்கியத்திற்கு என வழங்கப்படும் நோபல் பரிசு இறுதிச்சுற்றுப் பெயர்ப் பட்டியலில் இந்தியர்கள் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு