சிலியில் பெரும் நிலநடுக்கம்

ஞாயிறு, பெப்பிரவரி 13, 2011

சிலியின் மந்திய பகுதியில் 6.8 அளவு நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் உயரமான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆனாலும், உயிரிழப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.


இதே பகுதியில் கடந்த ஆண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற 8.8 அளவு நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.


வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் கொன்செப்சியோன் நகருக்கு 45 கிமீ வடக்கே 2005 ஒசநே மணிக்கு இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் இதே பகுதியில் இடம்பெற்றன. தற்போதைய நிலநடுக்கத்தை அடுத்து சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் 5.8 அளவு நிலநடுக்கம் இதே இடத்தில் இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


நிலநடுக்கம் ஏற்பட்டதும் மிக விரைவாக செயற்பட்ட மக்களை அரசுத்தலைவர் செபஸ்டியான் பினேரா பாராட்டினார். கடந்த ஆண்டு நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் அவசரநிலையைப் பற்றி அறிந்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


"2010 பெப்ரவரி 27 இல் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவ்வாறு நிலநடுக்கங்கள் இடம்பெற வாய்ப்புண்டு என நிலவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக அரசுத்தலைவர் கூறினார்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு