ஐம்பது புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய், செப்டெம்பர் 13, 2011

சிலியில் உள்ள நுண்தொலைநோக்கி மூலம் எமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே முன்னெப்போதும் அறியப்படாத ஐம்பது புதிய புறக்கோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


புதிதாதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள்களில் 16 புறக்கோள்கள் எமது பூமியை விடப் பெரியதும், ஆனால் வியாழனை விட சிறியனவாகவும் உள்ளன. இவை "சூப்பர் ஏர்த்ஸ்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று உயிரிங்கள் வாழக்கூடிய வலயத்தினுள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


இது குறித்த தகவல்கள் அமெரிக்காவின் வயோமிங்கு மாநிலத்தில் இடம்பெற்ற ஒரு மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகவல்கள் வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிடப்படவிருக்கிறது.


புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள்களில் 5 கோள்கள் பூமியை விட ஐந்து மடங்குக்கும் குறைவான பருமனைக் கொண்டுள்ளன. "உயிரினங்களைத் தேடும் பணி எதிர்காலத்தில் இக்கோள்களையே மையப்படுத்தி இடம்பெறும் என நாம் நம்புகிறோம்," ஜெனீவா வானியல் அவதான மையத்தைச் சேர்ந்த வானியலாளர் பிரான்செஸ்கோ பெப்பே தெரிவித்தார்.


சிலியின் லா சில்லா அவதானநிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 3.6 மீட்டர் நீள ஹார்ப்ஸ் என்ற நுண்தொலைநோக்கி மூலமே இத்தகவல்கள் பெறப்பட்டுள்ளன.


மூலம் தொகு