கனடியப் பழங்குடிச் சிறுவர்கள் தவறாக நடத்தப்பட்டமை குறித்து ஆணைக்குழு அறிக்கை

சனி, பெப்பிரவரி 25, 2012

கனடியப் பழங்குடியினச் சிறுவர்களை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்தெடுக்கும் கனடிய அரசுக் கொள்கை குறித்து ஆராய்ந்த அரசு ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை வெளியிட்டுள்ளது. பழங்குடிச் சிறுவர்கள் தவறாக நடத்தப்பட்டமை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.


மனிட்டோபா மிடில்சர்ச்சில் சென் பவுல் பாடசாலையில் பழங்குடியினப் பிள்ளைகள்

19ம் நூற்றாண்டில் நாடு உருவாக்கப்பட்டதில் இருந்து 1970கள் வரை சிறுவர்கள் தமது அடையாளம் அகற்றப்பட்டே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். 150,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் கிறித்தவத் தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் ஆசிரியர்களினால் தவறாக நடத்தப்பட்டனர். இப்பிள்லைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் போது "உயிரில்லாமலேயே" வெளியேறினர் என இடைக்கால அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இப்பிள்ளைகளின் வாழ்க்கை போதைப்பொருள், மது மற்றும் வன்செயல் போன்றவற்றினால் சீரழிக்கப்பட்டது.


பாடசாலைகளில் பழங்குடிடிச் சிறுவர்கள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தவறாக நடத்தப்பட்டிருந்தனர் என கனடிய நடுவண் அரசு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்புக் கொண்டிருந்தது. தமது தாய்மொழியில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தனர். இதனால் அவர்கள் தமது தாய் தந்தையருடன் பழகுவதைக் குறைத்துக் கொண்டனர். இவர்களின் வாழ்வியல் பொருளாதார மூலங்கள் சிதைக்கப்பட்டதால் இவர்கள் கனேடிய அரசைத் தங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.


உண்மை மற்றும் நல்லினக்க ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் இறுதி அறிக்கை 2012 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்படும்.


மூலம் தொகு