எழுத்தாளர் அனுராதா ரமணன் காலமானார்

திங்கள், மே 17, 2010


பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது 62 வது அகவையில் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.


சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த அனுராதா ரமணன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 850 நாவல்களையும் எழுதியுள்ளார். ஒரு மலரின் பயணம்’, ‘சந்திப்புகள் தொடரும்’, கூட்டுப்புழுக்கள்’, ’மழைக்கால மல்லிகைகள்’, ‘ஒரு வீடு இரு வாசல்’ போன்ற நாவல்கள் மிகவும் பிரபலமானவை.


சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள் ஆகிய இவருடைய நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.


எழுத்துத் துறையில் சிறந்து விளங்கியதற்காக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடமிருந்து தங்கப் பதக்கம் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது, நாவல்களின் ராணி உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தெலுங்கில் இவர் எழுதிய ‘ஒரு மனைவியின் கதை’ படத்துக்கு 5 விருதுகள் கிடைத்தன.


கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.


ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். மறைந்த அனுராதா ரமணனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூலம் தொகு