எத்தியோப்பிய விமானம் பெய்ரூட்டுக்கு அருகே கடலில் வீழ்ந்தது

திங்கள், சனவரி 25, 2010

90 பேருடன் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து புறப்பட்ட எத்தியோப்பியப் பயணிகள் விமானம் ஒன்று மத்தியதரைக் கடல் பகுதியில் வீழ்ந்தது.


பெரும் காற்றுடன் கூடிய காலநிலையில் அடிஸ் அபாபா நோக்கிச் சென்ற ஈடி409 விமானம் பெரும் தீக்குழம்புடன் கடலில் வீழ்ந்ததைத் தாம் பார்த்ததாக பலர் தெரிவித்தனர்.


21 பேருடைய உடல்கள் இது வரையில் மீட்கப்பட்டதாகவும், எவரும் உயிர் தப்பியிருப்பதாகக் கருதவில்லை எனவும் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.


இவ்விமானத்தில் சிறு குழந்தைகள் பலரும் பயணம் செய்திருக்கிறார்கள். 9 பேர் விமானப் பணியாளர்கள். பயணம் செய்தோர் பெரும்பாலானோர் லெபனான், மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள். இருவர் பிரித்தானியர்கள். ஏனையோர் துருக்கி, பிரான்ஸ், இரசியா, கனடா, சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்தவர்கள்.


பயணித்தவர்களில் ஒருவர் பெய்ரூட்டுக்கான பிரெஞ்சு தூதுவரின் மனைவி என்றும் விமான நிறுவன இணையத்தளம் தெரிவித்துள்ளது.


உள்ளூர் நேரப்படி இன்றூ அதிகாலை 0200 மணியளவில் ராடார் திர்ரையில் இருந்து இவ்விமானம் மறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.


லெபனானின் உலங்கு வானூர்திகளும், கடற்படைக் கப்பல்களும் விமானம் தொலைந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.


லெபனானில் நிலை கொண்டுள்ள ஐநாவின் அமைதிப்படையின் மூன்று கப்பல்களும் இரண்டு உலங்கு வானூர்திகளும் அங்கு விரைந்துள்ளன.


கடைசியாக எத்தியோப்பிய விமானம் ஒன்று 1996 ஆம் ஆண்டில் வீழ்ந்து நொறுங்கியது. அப்போது நைரோபியில் இருந்து 175 பேருடன் அடிஸ் அபாபா நோக்கிச் சென்ற விமானம் கடத்தப்பட்டு கொமரோசுத் தீவுல் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம்