இரசியக் கவிஞர் அந்திரே வஸ்னிசென்ஸ்கி, 77, காலமானார்

புதன், சூன் 2, 2010


சோவியத் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த இரசியக் கவிஞர் அந்திரே வஸ்னிசென்ஸ்கி (Andrei Voznesensky) தனது 77வது அகவையில் காலமானார்.


அந்திரே வஸ்னிசென்ஸ்கி

அந்திரே தனது வீட்டில் காலமானதாக இரசிய எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் கென்னடி இவானொவ் நேற்று அறிவித்தார்.


வழக்கத்துக்கு மாறான இவரது கவிதைகளினால் இவர் பழமைவாத சோவியத் கவிஞர்களினால் விமர்சனத்துக்குள்ளானார்.


ஏனைய சோவியத் கவிதைகளுக்கு மாறான கவிதைகளை இவர் எழுதி வந்தார். ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் வைத்து முன்னாள் சோவியத் தலைவர் நிக்கித்தா குருசேவ் இவரை நாடு கடத்தப் போவதாகப் பயமுறுத்தியிருந்தார்.


1960களில் இவர் ஐரோப்பாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் பலமுறை பயணம் மேற்கொண்டிருந்தார். இவரது இலக்கியக் கூட்டங்களுக்கு மண்டபம் நிறைந்திருக்கும். ஸ்டாலினின் ஆட்சியை இவர் வெளிப்படையாக விமரிசித்திருக்கிறார். 1968 இல் செக்கோசிலவாக்கியா மீது சோவியத் ஒன்றியம் படையெடுத்தமை, நாட்டைவிட்டு வெளியேறிய புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டமை போன்றவற்றை இவர் விமரிசித்திருக்கிறார்.


1976 ஆம் ஆண்டில் சிறிய கோள் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் அரசு விருது இவருக்கு 1978 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

மூலம் தொகு