26ஆவது பொங்கல் நாகசுவர விழா: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தொடங்கியது

செவ்வாய், சனவரி 14, 2014

தமிழகத்தில் நாதசுவர இசைக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை எனும் கருத்தினை அண்மைக்காலமாக இசை விமர்சகர்கள் தமிழக பத்திரிகைகளில் எழுதிவருகிறார்கள். இந்நிலையில், சென்னையின் இசை மன்றங்கள் சிலவற்றில் நாதசுவர இசைக்கென தனியாக விழா எடுத்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் 26ஆவது பொங்கல் நாகசுவர விழா நேற்று தொடங்கியது.


நான்கு நாட்களுக்கு நடக்கவிருக்கும் இந்த விழாவினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. இராமசுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இந்தத் தொடக்க விழாவில், நாதசுவர இசைக் கலைஞர் இஞ்சிக்குடி ஈ. எம். சுப்பிரமணியத்திற்கு ‘சங்கீத சூடாமணி’ பட்டம் வழங்கப்பட்டது. சுப்பிரமணியத்திற்கு தங்கப்பதக்கம், சான்றிதல் மற்றும் ஒரு இலட்சம் உரூபாய் அடங்கிய விருதினை இசை விற்பன்னர் பி. எம். சுந்தரம் வழங்கினார்.


சங்கீத சூடாமணி விருதினை ‘ஊக்குவித்தலின் ஒரு அடையாளமாக’ தான் பார்ப்பதாக, இஞ்சிக்குடி ஈ. எம். சுப்பிரமணியம் தனது ஏற்புரையின்போது பேசினார். இந்த விருதினை தனது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் உரித்தாக்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


மூலம் தொகு