வெனிசுவேலாவில் அனைவருக்கும் வீடு

ஞாயிறு, திசம்பர் 29, 2013

வெனிசுவேலாவில் மிகக்குறைந்த ஊதியம் பெற்றுவரும் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அரசின் சார்பில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.


இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவில் அனைவருக்கும் ஒரு சொந்த வீடு என்ற ஒரு புதிய திட்டத்தை அந்நாட்டின் முன்னாள் இடதுசாரி அரசியல் தலைவர் ஹியூகோ சாவேஸ் சில ஆண்டுகளுக்கு முன் துவக்கி வைத்தார். இதன்படி 2019 ஆம் ஆண்டிற்குள் 30 லட்சம் வீடுகளை வெனிசுவேலாவில் அரசின் சார்பில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.


இவ்வீடுகள் அந்நாட்டில் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களுக்கு அரசின் அதிகப்படியான மானியத்துடன் குறைந்த விலைக்கு அளிக்கப்படும். அதேநேரம், குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் குறைவாக ஊதியம் பெறுவோர்க்கும், 2010 ஆம் ஆண்டு அந்நாட்டில் பெய்த கடும் மழையின் காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது வரை 5 லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிட தயாராகி உள்ள நிலையில், மெரிடா நகரில் வெள்ளியன்று நடைபெற்ற ஒரு விழாவில் அரசுத்தலைவர் மதுரோ பங்கேற்று, மழையினால் வீடுகளை இழந்த 700 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக அரசின் இலவச வீடுகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.


மூலம் தொகு