வடக்கு மாலி தாக்குதலில் பிரெஞ்சுப் படைவீரர் உயிரிழப்பு

ஞாயிறு, மார்ச்சு 17, 2013

வடக்கு மாலியில் இடம்பெற்ற சண்டை ஒன்றில் பிரெஞ்சு கோப்பரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா ஒலாண்டேயின் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் படையினரின் எண்ணிக்கை இதன் மூலம் ஐந்தாக உயர்ந்துள்ளது.


உயிரிழந்த படைவீரரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருக்கும் பிரான்சுவா ஒலாண்டே எவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வியிரிழப்பு ஏற்பட்டது எனப்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.


அல்-கைதாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதிகளுடனான போரில் ஈடுபட்டு வரும் மாலி இராணுவத்தினருக்கு உதவி செய்வதற்காக பிரான்சு கடந்த சனவரி மாதத்தில் அங்கு தனது படையினரை அனுப்பியிருந்தது.


1960 ஆம் ஆண்டு வரையில் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகவிருந்த மாலியில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய இசுலாமியத் தீவிரவாதிகள் துவாரெக் இனப் போராளிகளுடன் இணைந்து மாலியின் வடக்குப் பகுதிகளைத் தமது கட்டுப்ப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.


ஆனாலும், துவாரெக் போராளிகளைப் புறம் தள்ளிய அல்-கைதா தீவிரவாதிகள் வடக்கே கடுமையான இசுலாமிய சரியா சட்டத்தை அமுல் படுத்தி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திம்பக்து நகரில் உள்ள பல முக்கிய வரலாற்றுச் சின்னங்களை அழித்தனர். இதன் பின்னர் அவர்கள் தெற்கு நோக்கித் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதனை அடுத்து பிரான்சு தனது 4,000 படையினரை மாலிக்கு அனுப்பியது.


மூலம் தொகு