லிபியாவில் அல்ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக் கொலை

திங்கள், மார்ச்சு 14, 2011

லிபியாவின் கிழக்கு நகரான பெங்காசிக்கு அருகில் அல்ஜசீரா தொலைக்காட்சி நிருபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கடாபிக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வரும் லிபியாவில் ஒரு பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.


அலி அசன் அல் சபார் என்ற இந்த படப்பிடிப்பாளர் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டு வாகனம் ஒன்றில் பெங்காசி திரும்பும் வழியில் இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், 3 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில் அலி அசன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் அல்ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றுமிரு செய்தியாளர்கள் காயமடைந்துள்ளனர்.


இந்த சம்பவத்தினால் நாங்கள் துவண்டு விட மாட்டோம் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதி முன் நிறுத்துவோம் என்றும் இந்நிறுவன இயக்குனர் ஜெனரலர் வாடா கான்பார் தெரிவித்துள்ளார்.


கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடாபிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளளனர்.

மூலம் தொகு