மலேசியா தீவிரவாத சந்தேகநபரை சிங்கப்பூருக்கு நாடு கடத்தியது

ஞாயிறு, செப்தெம்பர் 26, 2010


விமானம் ஒன்றைக் கடத்தி அதனை சிங்கப்பூர் விமான நிலையத்தில் மோதவிடுவதற்கு திட்டம் தீட்டியவர் எனச் சந்தேகிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டவரை மலேசியா சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பியது.


ஜெமா இசுலாமீயா என்ற தீவிரவாத அமைப்பின் சிங்கப்பூர் கிளையின் தலைவர் எனக் கருதப்படும் மாஸ் செலமாட் கஸ்தாரி என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர் ஆவார்.


இந்தோனேசியாவில் பிறந்த சிங்கப்பூர் வாசியான கஸ்தாரி (49) சிங்கப்பூரின் சிறைச்சாலை ஒன்றின் மலசலகூட சாளரத்தை உடைத்து தப்பி மலேசியாவுக்குள் நுழைந்த போது 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் அங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார்.


2003 ஆம் ஆண்டில் இவர் இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அதி-உயர் பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அச்சிறையில் இருந்து பெப்ரவரி 2008 இல் தப்பி வெளியேறினார். பலத்த தேடுதல்களுக்கு மத்தியில் இவர் இரு நாடுகளையும் பிரிக்கும் சிறு கடல் பகுதியை நீந்திக் கடந்து மலேசியாவுக்குள் சென்றார். மலேசியாவின் தெற்கு ஜோகோர் மாநிலத்தில் இவர் மலேசியக் காவல்துரையினரால் கைது செய்யப்பட்டார்.


2002 பாலி குண்டுத்தாக்குதல் உட்பட பல தீவிரவாதத் தாக்குதல்களை ஜெமா இசுலாமியா இயக்கம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்