மலேசியாவின் முன்னாள் மாமன்னர் ஜோகூர் சுல்தான் இஸ்காண்டர் காலமானார்

ஞாயிறு, சனவரி 24, 2010



5 ஆண்டுகள் மலேசியாவின் மாமன்னராகவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜோகூர் மாநிலத்தின் சுல்தானாகவும் இருந்த சுல்தான் இஸ்காண்டர் அவரது 77 வது வயதில் 22ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு மரணம் அடைந்தார்.


மறைந்த சுல்தானுக்கு இறுதி மரியாதை செலுத்த எல்லா நிலைகளையும் சேர்ந்த மக்கள் நேற்று காலை 9 மணியிலிருந்து இஸ்தானா புசார் வளாகத்தில் ஒன்றுகூடத் தொடங்கினர்.


ஜோகூர் சுல்தான் இஸ்காண்டர் காலமானதைத் தொடர்ந்து, மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் தமது இந்தியப் பயணத்தை குறைத்துக் கொண்டு நேற்று அதிகாலை மலேசியா திரும்பினார்.


மறைந்த சுல்தானின் மூத்த மகன் துங்கு இப்ராகிம் இசுமாயில் சுல்தான் இஸ்காண்டார் இன்று ஜோகூரின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.


78 வயதான் சுல்தான் 1932ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி ஜோகூர்பாருவில் உள்ள இஸ்தானா செமாயாமில் பிறந்தார். ஆஸ்திரேலியாவிலும் பிரித்தானியாவிலும் தமது மேற்கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் ஜோகூர் அரசாங்கச் சேவையில் பயிற்சி அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். 1981ம் ஆண்டு அவரது தந்தையார் காலமான பின்னர் அவர் ஜோகூர் சுல்தானாக அரியணை அமர்ந்தார். 1984ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை அவர் மலேசிய மாமன்னராகவும் பணியாற்றியுள்ளார்.

மூலம்