மடகாஸ்கர் இராணுவக் குழுவினரின் கிளர்ச்சி அடக்கப்பட்டது

ஞாயிறு, நவம்பர் 21, 2010

கிளர்ச்சி இராணுவக் குழுவினர் கடந்த மூன்று நாட்களாக கைப்பற்றி வைத்திருந்த இராணுவத் தளம் ஒன்றின் மீது மடகஸ்காரின் பாதுகாப்புப் படையினர் திடீர்த் தாக்குதலை மேற்கொண்டு அதனைக் கைப்பற்றினர்.


கிளர்ச்சிக்காரர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சத்தங்கள் அடங்கியுள்ளதாக செய்திகல் தெரிவிக்கின்றன.


கிளர்ச்சி இராணுவக் குழு கடந்த வியாழக்கிழமை அன்று விமான நிலையத்துக்கு அருகாமையில் இருந்த இராணுவ முகாமைக் கைப்பற்றி நாட்டைத் தாம் கைப்பற்றியிருப்பதாக அறிவித்தனர். 2009 ஆம் ஆண்டில் அரசுத்தலைவர் ஆண்ட்ரி ராசொய்லினாவை ஆட்சிக்குக் கொண்டுவந்த இராணுவப் புரட்சிக்கு உதவியவர்கள் சிலரும் இக்கிளர்ச்சியில் பங்கு கொண்டனர்.


சனிக்கிழமை அன்று நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றியிருந்த முகாமை முற்றுகையிட்டதை அடுத்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் அங்கு கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் முகாம் வெகு விரைவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


"அவர்கள் எம்மிடம் சரணடைந்து விட்டனர். இரத்தக்களரி இல்லாமல் எமது நடவடிக்கை எதிர் நடவடிக்கை முடிந்து விட்டது," என நாட்டின் இராணுவப் பேச்சாளர் அலெயின் ரமரோசன் ஏஎஃப்பி செய்தியாளருக்குத் தெரிவித்தார். 20 நிமிடங்களில் முழு நடவடிக்கையும் முடிந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.


சென்ற வியாழன் அன்று புதிய அரசியலமைப்புத் திட்டம் தொடர்பான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. இவ்வாக்கெடுப்பு மூலம் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை ஆண்ட்ரி ராசொய்லினா பதவியில் இருப்பதற்கு வழி வகுக்கிறது. பொது வாக்கெடுப்பை மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

தொடர்புள்ள செய்தி தொகு


மூலம் தொகு