மக்கள் தொகை கணக்கெடுப்பில் மூன்றாம் பாலினத்தவர்களையும் சேர்க்க கருணாநிதி வலியுறுத்தல்

சனி, ஏப்பிரல் 3, 2010

இந்தியாவின் 2011 க்கான மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1, 2010 அன்று தொடங்கியது. முதல் நபராக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் தமது விவரங்களை வழங்கினார். அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ப.சிதம்பரம் "இது உலகிலேயே மிகப்பெரிய பணி" என்று குறிப்பிட்டார். இக்கணக்கெடுப்பில் குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் மட்டுமின்றி, பயன்படுத்தும் செல்பேசி, கணினி, இணையத் தொடர்பு, குடி நீர் வசதி, கைரேகை பதிவு ஆகியனவும் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்தக் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்படுகின்றன. இப்பணியில் 25 இலட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்பணிக்காக ரூ 2ஆயிரத்து 209 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டில் உள்ள ஆண், பெண் மட்டுமல்லாது மூன்றாம் பாலினத்தவர்களான அரவாணிகளையும் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வீடில்லாத நடைபாதை வாசிகளின் நிலையையும் கணக்கெடுப்பில் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.


மேலும், "நமது நாட்டில் ஆண் இனத்திலும் சேராமல் பெண் இனத்திலும் சேராமல் அரவாணிகள் என்றழைக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.அவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும். அதற்கு ஏற்ப மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்பாடுகளில் தேவையான திருத்தம் செய்யவேண்டும்".


அதுபோல நாம் பல்வேறு நலத்திட்டங்கள், நடவடிக்கைகள் செய்துள்ள போதிலும் நடைபாதைகளில் குடியிருப்பவர்களும் நிறைய பேர் உள்ளனர்.


பொதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் போது அவர்கள் விடுபட்டு போய் விடுகிறார்கள். எனவே நடைபாதைகளில் குடியிருப்பவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம் தொகு