போபர்ஸ் ஆயுத பேர ஊழல்: இத்தாலியத் தொழிலதிபருக்கு சட்டவிரோத தரகர் கட்டணம் வழங்கப்பட்டது

செவ்வாய், சனவரி 4, 2011

20 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் காந்தி பதவியை இழக்கக் காரணமாக இருந்த போபர்ஸ் அவதூறின் போது இத்தாலியத் தொழிலதிபர் ஒருவருக்கு சட்டவிரோதமாகப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டதாக இந்தியாவின் வருமான வரி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


ஒட்டாவியோ குவாத்துரோச்சி என்ற தொழிலதிபருக்கும், வின் சாத்தா என்ற இந்தியத் தரகருக்கும் ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்திய இராணுவத்துக்கு 1986 ஆம் ஆண்டில் 155 மிமீ பீரங்கிகள் சுவீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியதில் பல கோடி ரூபாய் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தபட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் 1989 தேர்தலில் தோல்வியைக் கண்டது.


இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., 2009 ஆம் ஆண்டில் குவாத்துரோச்சிக்கு இந்த ஊழலில் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்து குவாத்ரோச்சியின் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்கிவிட்டது. அத்துடன் இண்டர்போலின் தேடப்பட்டவர்களின் பட்டியலிலும் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டது.


இதற்கிடையில் வின் சாத்தா இறந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சியான ஜேவிபி இவ்வழக்கை மீள விராரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி கேட்டது.


நீதிபதிகள் ஆர்.சி.சர்மா, ஆர்.பி.துலானி ஆகியோரைக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று தீர்ப்புக் கூறியது. இடைத் தரகர் வின் சாத்தா, தொழில் அதிபர் குவாத்துரோச்சி ஆகியோருக்கு ரூ.41 கோடி தரகர் கட்டணம் வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தனர். இந்தியாவில் அந்த தொகை வழங்கப்பட்டிருப்பதால் அதற்கான வருமான வரியை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


இந்த தீர்ப்பு இந்திய நடுவண் அரசுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.


மூலம் தொகு