பெலருஸ் தொடருந்துக் குண்டுவெடிப்பு, குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

சனி, மார்ச்சு 17, 2012

பெலருஸ் தலைநகர் மின்ஸ்க்கின் தொடருந்து நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


விளாதிசுலாவ் கொவாலியொவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவரது தாயார் இன்று சனிக்கிழமை தெரிவித்தார். தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரபூர்வமாகத் தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லியூபோவ் கவாலியோவா மின்ஸ்க் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். தனது மகன் ஒரு அப்பாவி என்றும், பெலருசிய அதிகாரிகள் தமது குற்றங்களை மறைப்பதற்கு எமது பிள்ளைகள் மேல் குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


இவர்களது மரணதண்டனைகளை இரத்துச் செய்யுமாறு மேற்கத்தைய அரசுகளும் மனித உரிமை அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனாலும் பெலருஸ் அரசுத்தலைவர் அலெக்சாண்டர் லூக்கசென்க்கோ மன்னிப்பு வழங்க மறுத்து விட்டார். ஐரோப்பிய நடுகளில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் ஒரேயொரு நாடு பெலருஸ் ஆகும்.


திமீத்ரி கொனவாலொவ் என்ற இரண்டாவது குற்றவாளியின் மரணதண்டனை எப்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2011 ஏப்ரல் 11 இல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு