புனே குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, பெப்பிரவரி 14, 2010


இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் சனிக்கிழமை மாலை உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தார்கள். இதில் ஒருவர் வெளிநாட்டவர். 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.


இந்தியாவில் புனேயின் அமைவிடம்
புனேயில் உள்ள ஓஷோ ஆசிரமம்

புனேயின் ஓஷோ ஆசிரமத்திற்கு அருகே உள்ள ஜெர்மன் பேக்கரியில் மாலல 7 மணியளவில் இந்த வெடிச்சம்பவம் ஏற்பட்டது. அந்த இடம், வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் கூடும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. சபாட் ஹவுஸ் அதற்கு மிக அருகில் உள்ளது. காயமடைந்தவர்களில் பலர் வெளிநாட்டவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.


சனிக்கிழமை மாலை என்பதால் அந்த இடத்தில் ஏராளமான வெளிநாட்டவர்கள் கூடியிருந்ததாகத் தெரிகிறது. மாலை 7.15 மணியளவில் பெருத்த சத்தத்துடன் ஜெர்மன் பேக்கரியில் வெடிச் சம்பவம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால், பலர் பேக்கரிக்குள் இருந்து வெளியில் தூக்கியெறியப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.


இந்தச் சம்பவம், பயங்கரவாதத் தாக்குதல் என்று இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். வெளிநாட்டினரைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும், உள்துறைச் செயலர் தெரிவித்தார். தேடுவாரற்றுக் கிடந்த ஒரு பொதியை சிப்பந்தி ஒருவர் திறந்து பார்க்க எத்தனிக்கையிலேயே அப்பொதி வெடித்ததாக அவர் தெரிவித்தார்.


முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய புனே நகர துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திர சோனாவானே, பூர்வாங்கத் தகவல்கள் மூலம், குண்டுவெடிப்பு என சந்தேகிப்பதாகத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினரும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்