பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டோ ஓய்வுபெறுகிறார்

புதன், பெப்பிரவரி 16, 2011

உலக கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ரொனால்டோ தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த ரொனால்டோ மூன்று முறை பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு ஃபிஃபாவின் சிறந்த வீரர் விருது பெற்றவர்.


ரொனால்டோ, 2005

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் அதிகப்படியான கோல்களை அடித்தவர் என்கிற பெருமை ரொனால்டோவுக்கு உண்டு. அப்போட்டிகளில் அவர் 15 கோல்களை அடித்துள்ளார். உலகளவில் 18 ஆண்டுகள் உதைபந்து விளையாட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றிருந்த ரொனால்டோ பல உச்சங்களைத் தொட்டவர். அதே போல வீழ்ச்சிகளையும் கண்டவர்.


1996 – 97 ஆம் ஆண்டுகளில் அவர் பார்சிலோனா கால்பந்து அணிக்காக ஆடியபோது, கோல்போடும் ஒரு இயந்திரமாகவே காணப்பட்டார். தேவைப்படும் நேரத்தில் வேகமாக ஓடி, வேகத்தை குறைக்க வேண்டிய சமயத்தில் அதை சரியாக கையாண்டு, குறித்த தருணத்தில் பந்தை கோல் வலைக்குள் தள்ளுவதில் அவர் வல்லவர்.


அப்போது தான் அவரது முழங்காலில் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன. தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு கிட்டத்தட்ட கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். ஆனாலும் 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பிரேசில் வென்ற போது, அவரது கால்பந்து வாழ்க்கை ஒரு உணர்வுபூர்வமான உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பிறகு தனது உடல் தகுதியை தக்க வைத்துக்கொள்ள அவர் மிகவும் சிரமப்பட்டார்.


2011 ஆம் அண்டு அவரது உதைபந்து வாழ்க்கையில் ஒரு மகுடமாக இருந்திருக்க வேண்டியது, ஆனால் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் ஏற்பட்ட வன்முறை காரணமாக ஒரு கசப்புணர்வுடனேயே தான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் நிலைக்கு ரொனால்டோ ஆளாகியுள்ளார்.


மூலம் தொகு