நைஜீரியப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்

திங்கள், ஏப்பிரல் 30, 2012

நைஜீரியாவின் வடக்கே கானோ நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, மற்றும் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.

பயேரோ பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் கிறித்தவர்களின் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன் போது மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர். குண்டுதாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


எக்குழுவும் இத்தாக்குதலுக்கு உரிமை கோராவிடினும், அண்மைக் காலங்களில் இப்பகுதியில் கிறித்தவ ஆலயங்கள் மீது போக்கோ அராம் என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழு தாக்குதல் நடத்தி வருகிறது. இக்குழு முக்கியமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கே மையம் கொண்டுள்ளது.


நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் வட-கிழக்கு நகரான மைதுகுரியில் ஒரு கிறித்தவத் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.


கடந்த சனவரி மாதத்தில் கானோ நகரில் போக்கோ அராம் நடத்திய தாக்குதல் ஒன்றில் 180 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு