நேபாள விமான விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு

திங்கள், மே 14, 2012

நேபாளத்தின் வடக்குப் பகுதியில் 21 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அக்னி ஏர் எனும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் ஜாம்சொம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இவ்விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.


இன்று காலை 09:45 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றது. இவ்விமானத்தில் 18 பயணிகள், மூன்று விமானப் பணியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 21 பேர் பயணம் செய்தனர். இதில் 13 இந்தியர்கள் உட்பட 15 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.6 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர் தப்பியவர்களில் விமானப் பணியாளர் ஒருவரும், இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று இந்தியர்களும் அடங்குவர். ஏனையோர் வேறு நாட்டவராவர்.


மலைகள் நிறைந்த நேபாளத்தில் இது போல சிறிய விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதாக கூறப்படுகிறது. மேலும் சென்ற வருடம் காத்மாண்டு அருகே நடந்த விமான விபத்தில் 19 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.


பிந்திக் கிடைத்த செய்திகளின் படி இந்த விமான விபத்தில் இந்தியாவின் திரைப்படக் குழந்தை நடிகை தருணி சச்தேவ் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். 14 வயதான இவர் தனது தாயாருடன் விபத்தில் இறந்தார். பா என்ற திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். மொத்தம் 13 இந்தியர்கள் இவ்விபத்தில் இறந்துள்ளனர்.


மூலம் தொகு