நெல்சன் மண்டேலா விடுதலையின் 20 ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது

வெள்ளி, பெப்பிரவரி 12, 2010


தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு நாளை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர்.


நெல்சன் மண்டேலா (2008)

கேப்டவுன் நகர் அருகே மண்டேலா விடுதலையாகியிருந்த சிறை வாயிலின் முன்பு நினைவு வைபவம் ஒன்று நடந்துள்ளது.


விக்டர் வெர்ஸ்டர் சிறையின் வாயிற் கதவுக்கு வெளியே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் வர்ணங்களான மஞ்சள், கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் உடையணிந்த பெருந்திரளான மக்களும், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட பிரமுகர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர்; ஆடிப் பாடி கொண்டாடினர்.


தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் அரசாங்கத்தை எதிர்த்தமைக்காக 1964ல் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலா தனது வாழ்க்கையில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்த பின்னர், தனது 71ஆவது வயதில் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.


தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிய வேண்டும் என்ற விடுதலை வீரர்களின் கனவு மெய்ப்படவும், நான்கு ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஜனநாயகம் மலரவும் மண்டேலாவின் விடுதலை வழிவகுத்திருந்தது.


விடுதலைக்குப் பின்னர் நாட்டில் இனவெறி ஆட்சியை அகற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார். தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடக்க இவை வழி வகுத்தன.


1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா.

மூலம்