திசைநாயகத்திற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இணக்கம்

புதன், திசம்பர் 23, 2009


கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசைநாயகத்திற்கு பிணை வழங்க ஆட்சேபனை எதுவுமில்லை என்று சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.


தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து திசைநாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து, தம்மைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


நோத்ஈஸ்ட் மாதாந்த இதழின் செம்மையாக்கல், பதிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டதன் மூலம் இன நல்லுறவைச் சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதத்திற்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திசைநாயகத்திற்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.


மேற்படி சஞ்சிகையை நடத்துவதற்கு நிதி சேகரித்தமை, இதன் மூலம் பயங்கரவாத்தை ஊக்குவித்தமை போன்ற அவசரகாலப் பிரமாணங்களின் கீழ், தண்டனைக்குரிய குற்றச்செயல்களைப் புரிந்த குற்றவாளியாகவும் அவர் இனம் காணப்பட்டார். கைதுசெய்யப்பட்ட தமது நண்பர் யசிகரனையும் அவரது மனைவியையும் பார்ப்பதற்காக திசைநாயகம் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்குச் சென்றபோது 2008, மார்ச் 7 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.

தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு