தமிழ் வளர்ச்சி இயக்க பணியாளர்களுக்கு தமிழ்க்கணினிப் பயிலரங்கம்

சனி, மார்ச்சு 29, 2014

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்க பணியாளர்களுக்கு மார்ச்சு 22, 23 ஆகிய இருநாட்களில் சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்க அலுவலகத்தின் கருத்தரங்க அறையில் தமிழ்க்கணினி பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிரங்கினை தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் தொடங்கி வைத்து, காலத்தின் தேவை கருதி தமிழக அரசுப்பணியாளர்கள் கணித்தமிழில் பயிற்சி பெற வேண்டும் என்று கூறினார்.


இப்பயிலரங்கினை பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி ஒருங்கிணைத்து, தமிழ்க்கணிமையின் தேவை, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் என்பதான பொருண்மைகள் குறித்த கணினிவழி நேரிடை செயல்முறைப் பயிற்சியை அவர் அளித்தார்