சிட்னியில் இந்துக் கோயில் மீது துப்பாக்கிச் சூடு

வெள்ளி, ஏப்பிரல் 1, 2011

ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் அமைந்துள்ள இந்துக் கோயில் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.


சிட்னியில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வதியும் ஓபர்ன் நகரில் சிறீ மந்திர் என்ற இந்த இந்தியக் கோயில் அமைந்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இக்கோயிலே ஆத்திரேலியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட இந்துக் கோயில் எனத் தெரிவிக்கப்படுகிறது. சென்ற வாரம் இக்கோயிலுள் நுழைந்த முகமூடி அணிந்த 2 நபர்கள் கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டில் எவரும் காயமடையவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோயில் சுவரில் துப்பாக்கி ரவைகள் துளைத்துக்கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் உள்ளன. இக்கோயில் முன்னரும் பல முறை இனந்தெரியாதோரினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. முன்னர் ஒரு தடவை பெற்றோல் குண்டு வீசப்பட்டது. கடந்த நவம்பரில் கோயிலின் இரண்டு சாளரங்கள் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டன. பல தடவைகள் முட்டைகள், கற்கள் இக்கோயிலின் மீது வீசப்பட்டுள்ளன.


இத்தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனாலும் காவல்துறையினர் இத்தொடர் தாக்குதல் நிகழ்வுகள் குறித்துப் பாராமுகமாக இருந்து வருவதாக இங்குள்ள இந்திய சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.


மூலம் தொகு