சப்பான் நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை 10,000 ஆக மதிப்பீடு

புதன், மார்ச்சு 16, 2011

கடந்த வெள்ளிக்கிழமை சப்பானைத் தாக்கிய நிலநடுக்கத்தாலும் மற்றும் அதன் பின்னரான ஆழிப்பேரலையாலும் இறந்தோர் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 2,400 என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சுமார் 10,000 பேர் வரையில் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


செண்டாய் நிலநடுக்கத்தின் பின்னர் டோக்கியோ நகரம்

மியாகி என்ற இடத்தில் மட்டும் 2,000 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் ஒரு நகரத்தில் மட்டும் மொத்த மக்கள்தொகையான 17,000 பேரில் அரைவாசிப்பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சின்னாபின்னமாகியிருக்கும் கரையோர நகரங்களில் சடலங்களைத் தோண்டியெடுக்கும் பணியை மீட்புப்பணியாளர்களின் உதவியுடன் தீவிரப்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட 350,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.


மூன்றாவது நாளாக குடிநீர், உணவு, மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டால் வாடிக் கொண்டிருக்கும் வட,கிழக்குக் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் குளிரினாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பொருட்கள் இன்னரும் சீரான முறையில் கிடைக்கவில்லை என்று கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இவாத்தேயிலுள்ள அரச அதிகாரியான ஹச்சினி ஷட்டோ கூறியுள்ளார். எமக்குத் தேவையானவற்றில் 10 சதவீதமானவற்றையே நாம் பெற்றுக்கொள்கிறோம். ஆனால்,நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். ஏனெனில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சகலருமே துன்பப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் இடம்பெற்ற பின்னர் அந்தப் பகுதிகளில் 150 சிறிய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை 6.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.


இதற்கிடையில், குளிரூட்டி செயலிழந்த காரணத்தால் வெப்பநிலை அதிகரித்து புக்குசீமாவில் 2வது அணு உலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, அணு உலைகள் உருகும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும், அணுக்கதிர் வீச்சு அளவு மனித உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் சப்பானிய அரசு முதல் முறையாக உறுதி செய்துள்ளது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு