கெமரூச் சிறைத் தலைவருக்கு எதிரான தீர்ப்பு ஜூலை 26 இல் வழங்கப்படும்

செவ்வாய், மே 25, 2010

கெமரூச்சின் முன்னாள் சிறைச்சாலைத் தலைவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜூலை 26 இல் வழங்கப்படவிருப்பதாக ஐநா ஆதரவுடன் இயங்கும் இனப்படுகொலைக்கு எதிரான கம்போடிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.


கெமரூச் படுகொலை (1975-1979)

67 வயதான ”டச்சு” என அழைக்கப்படும் கெய்ங் குயெக் ஈவ் என்பவர் கம்போடியாவில் 1975 - 1979 காலப்பகுதியில் மனித உரிமை மீறல், மற்றும் கொலைகள் போன்றவற்றிற்காக விசாரிக்கப்பட்டு வருகிறார்.


"கம்போடிய மக்களுக்கு இதுவொரு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெமரூச்சை சேர்ந்த எவராவது நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று 30 ஆண்டு காலமாக கம்போடிய மக்கள் காத்திருந்தனர்,” என்று நீதிமன்றப் பேச்சாளர் லார்ஸ் ஒல்சென் கூறியுள்ளார்.


கெமரூச்சின் ஆட்சிக்காலத்தில், 1975 - 1979 காலப்பகுதியில் பட்டினி, நோய் மற்றும் நீதி விசாரணைக்குப் புறம்பாக மரண தண்டனையால் 2 மில்லியம் மக்கள் இறந்தனர். கம்யூனிஸ்ட் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக கெமர்ரூச் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நகரங்கள் வெறுமையாகின. பண்ணைகளுக்கு மக்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.


டுவோல் சிலெங் சிறையில் கெமரூச்சின் எதிரிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுமிருந்ததை மேற்பார்வை செய்ததை டச் விசாரணையின் போது ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளார். அவர் மீதான விசாரணை கடந்த பெப்ரவரியில் ஆரம்பமாகியிருந்தது.


கம்யூனிஸ்ட் ஆட்சியைச் சேர்ந்த சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் முதலாவது தலைவர் டச் ஆவார்.

தொடர்புள்ள செய்திகள் தொகு

நவம்பர் 26, 2009

மூலம் தொகு