கீரனூரில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்

புதன், திசம்பர் 18, 2013

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில், மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டுக் கீரனூர் பகுதியைச் சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு கீரனூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில், 25.01.2014 அன்று 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நிகழ்த்த உள்ளது.

இப்பயிலரங்கில், வளருங்கள் வாழ்த்துகிறோம் அமைப்பின் செயலர் செ. குறிஞ்சிவாணன் வரவேற்புரை வழங்க உள்ளார். இப்பயிலரங்கத்தைத் பெரியண்ணன் அரசு தொடங்கி வைத்துத் தலைமையுரை வழங்கவும், புதுக்கோட்டை மாவட்டக் கணித்தமிழ் சங்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்விற்கு மேனாள் அரசு பொது வழக்குரைஞர் கே.கே செல்லப் பாண்டியன் முன்னிலை வகிக்க உள்ளார்.

இப்பயிலரங்கில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி சிறப்புரை ஆற்றி, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப் பயிற்சி அளிக்க உள்ளார்.

தமிழகம் வலைதளமும் வளருங்கள் வாழ்த்துகிறோம் அமைப்பின் செயலர், புதுக்கோட்டை மாவட்டக் கணித்தமிழ் சங்க அமைப்பாளர் செ. குறிஞ்சிவாணனும் இந்தப் பயிலரங்கினை ஒருங்கிணைக்க உள்ளார்.

இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை தமிழகம்  வலைதளம், king12flower@gmail.com, tparithi@gmail.com என்னும் மின்னஞ்சல் அல்லது +91-9750933101, +91-9943470100 ஆகிய இரு தொடர்பு எண்களில் பதிவு செய்து, பயிலரங்கில் பங்கேற்கலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும்.