காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

செவ்வாய், செப்டெம்பர் 20, 2016

2016, செப்டம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை அன்று, வடஇந்திய மாநிலமான காசுமீர் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள யுரி எனும் பகுதியில் இராணுவ முகாம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோதி தலைமையிலான உயர்மட்டக் கூட்டம் திங்கட்கிழமை (19.09.2016) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகர், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இராணுவ தளபதி தல்பிர் சிங் போன்றோர் கலந்து கொண்டனர். இதில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் காசுமீர் பள்ளதாக்கு பகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர். முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், திங்கட்கிழமை சம்மு காசுமீர் எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பாக்கித்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பாக்கித்தான் அரசு உறுதியாக மறுத்துள்ளது. பாக்கித்தான் ஒரு பயங்கரவாத நாடாக இருக்கிறது என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளார்.


மூலம் தொகு