கானாவில் சரக்கு விமானம் பேருந்து மீது வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, சூன் 3, 2012

கானா தலைநகர் ஆக்ராவில் சரக்கு விமானம் ஒன்று தரையில் நின்ற பயணிகள் பேருந்துடன் மோதியதில் பேருந்தில் இருந்த 10 பேர் கொல்லப்பட்டனர். விமானிகள் நால்வரும் உயிர் தப்பினர்.


நேற்று சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 7:10 மணிக்கு கொட்டோக்கா பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டது. நைஜீரியாவின் லாகோசு நகரில் இருந்து சென்ற போயிங் 727 விமானமே கொட்டோக்கோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


விபத்துக் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறும் என கானாவின் பிரதி அரசுத்தலைவர் ஜோன் திரமானி மகமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


24 மில்லியன் மக்களைக் கொண்ட மேற்காப்பிரிக்க நாடான கானாவில் அண்மைக் காலங்களில் விமான விபத்துகள் ஏதும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம் தொகு