கடாபியை உயிருடன் கைப்பற்றியவர் கடுமையான சித்திரவதைக்குப் பின் உயிரிழந்தார்

புதன், செப்தெம்பர் 26, 2012

லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியை உயிருடன் பிடித்தவரான ஒம்ரான் பென் சாபான் என்பவர் நேற்று பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார். இவர் கடாபியின் ஆதரவாளர்களால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.


22 வயதான சாபானின் உடல் அவரது பிறந்த ஊரான மிஸ்ரட்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவரது இறுதிக்கிரியைகளில் இன்று பத்தாயியத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


சாபான் கடந்த சூலை மாதத்தில் கடத்தப்பட்டு 50 நாட்களாக பானி வாலிது என்ற நகரில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அரசுத்தரப்பின் சமரசப் பேச்சுக்களை அடுத்து கடந்த வாரம் இவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் கடுமையான சித்திரவதைக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் இலக்கான நிலையின் விடுவிக்கப்பட்ட சாபான் பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நேற்று உயிரிழந்தார்.


கடந்த ஆண்டு அக்டோபர் 20 இல் கடாபியை அவர் மறைந்திருந்த வடிகால் குழாயில் இருந்து வெளியே இழுத்தெடுத்து வீதியெங்கும் இழுத்துச் சென்றதை அடுத்து சாபான் பிரபலமானார்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு