கடாபிக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட மாட்டாது என உருசியா அறிவிப்பு

திங்கள், சூலை 18, 2011

லிபிய அரசுத்தலைவர் முஆம்மர் கடாஃபி தனது பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு உருசியா அரசியல் தஞ்சம் வழங்காது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரொவ் தெரிவித்துள்ளார்.


"இக்கேள்விக்கு நாம் பல முறை பதிலளித்துள்ளோம். எதிர்மறையானதே எமது பதில்," என லாவ்ரொவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


லிபியாவின் இடைக்கால தேசிய சபையை பேச்சுவார்த்தைக்கான இணைப்பாக உருசியா அங்கீகரித்துள்ளது. ஆனால் லிபிய மக்களின் ஒரே ஒரு பிரதிநிதியாக நாம் அதனை ஏற்கப்போவதில்லை என அவர் கூறினார்.


ஐக்கிய நாடுகள், அரபு முன்னணி, ஆப்பிரிக்க ஒன்றியம் உட்பட 40 நாடுகளின் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று லிபியாவின் இடைக்கால தேசிய சபையை (Transitional National Council of Libya TNC) லிபியாவின் அதிகாரபூர்வ அரசாக அங்கீகரித்துள்ளது. அத்துடன் கடாபியின் அரசு தனது சட்டபூர்வமான தலைமையை இழந்து விட்டது எனவும் அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடாபியின் குடும்பம் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் கோரியுள்ளது.


இதற்கிடையில், கிழக்கு நகரான பிரேகாவில் தாம் கடாபியின் இராணுவத்தினரின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.


கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் கடாபியின் ஆதரவுப் படைகளுக்கும் இடையே பெரும் சண்டை நிகழ்ந்து வருகிறது. நேட்டோ தலைமையிலான பன்னாட்டு இராணுவத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மூலம் தொகு