கடவுளைக் குறிக்க அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்: மலேசியாவில் தீர்ப்பு

வெள்ளி, சனவரி 1, 2010


கடவுளைக் குறிக்கின்ற போது அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்த கிறித்தவர்களுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான உரிமை இருக்கிறது என்று மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதற்கான அரசாங்கத் தடையை இந்த தீர்ப்பு நிராகரிக்கிறது.


கத்தோலிக்க பதிப்பகமான "எரால்டு" தனது வாரப் பத்திரிக்கையில் "அல்லா" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சு தடை விதித்தது. இதனை எதிர்த்து எரால்டு பத்திரிகை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கிற்கான தீர்ப்பை இன்று உயர் நீதிமன்றம் வழங்கியது. அதில் அல்லா என்ற வார்த்தை இஸ்லாமிய சமயத்தினர்க்கு மட்டுமே உரியது அல்ல என நீதிபதி தீர்ப்பு வழங்கினர்.


இனத்தாலும், மதத்தாலும் பிரிக்கப்படாமல், ஒன்றுபட்ட மலேசியாவை விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வெற்றி என்று இந்த இதழின் ஆசிரியர் லோரண்ஸ் அண்ட்ரூ பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். மலேசியர்களில் ஏறத்தாழ 850,000 பேர் கத்தோலிக்கர்கள் ஆவர்.


கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிப்பதாக பிபிசியின் கோலாலம்பூர் நிருபர் கூறுகிறார். இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும்.

மூலம் தொகு