இலங்கை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை

வெள்ளி, நவம்பர் 2, 2012

இலங்கை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டது. நிதி மோசடி மற்றும் தொழில்சார் ஊழல்களில் ஈடுபட்டதாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவாக்கச் சபைக்கும் நீதித்துறைக்கும் இடையில் காணப்படக்கூடிய சமநிலைக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பிரதம நீதியரசர் தனது பதவியைப் பயன்படுத்தியமையே அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் கொண்டுவரக் காரணியாய் அமைந்தது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரத்தின் உள்ளடக்கம் குறித்து புலன் விசாரணை நடாத்துவதை ஊடகவியலளர்கள் நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டது.


ஆளும் கட்சியைச் சேர்ந்த 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். இந்தப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையின் அனுமதி கிடைத்துள்ளது.


அரசியலமைப்பின் 107ம் சரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் அல்லது உச்ச நீதிமன்ற நீதவான் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க முன்னர் நாடாளுமன்றின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். இதன்படி, குறைந்தபட்சம் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் தேவை என்ற போதிலும், 117 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.


கடந்த செப்டம்பர் மாதத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒரு நிதியை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான திவிநெகும என்ற சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை தாமதப்படுத்திய சிராணி பண்டாரநாயக்கவின் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அரசாங்கத்தை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியிருந்தது.


சில வாரங்களின் பின்னர், அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்வதாகக் கருத்துக் கூறிய மற்றுமொரு மூத்த நீதிபதி கைத்துப்பாக்கி முனையில் மிரட்டப்படார்.


இலங்கை அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்சவின் அதிகரித்துவரும் அதிகாரங்கள், சட்டத்தின் ஆட்சியை குறைத்து மதிப்பிடுவதாக பல பன்னாட்டு உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ளன.


இதேவேளையில், இலங்கையில் நீதி நிருவாகத் துறையில் அரசாங்கத்தின் தலையீடு நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.


ஜே.ஆர். ஜயவர்தன முன்னர் அரசுத்தலைவராக இருந்த போது பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கு எதிரகாவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பணியாற்றிய காலத்தில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு எதிராகவும் அப்போதைய சபாநாயகர்களிடம் நம்பிக்கையில்லா பிரேரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மூலம் தொகு