இலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல்

சனி, நவம்பர் 28, 2009:

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளராக மனுத் தாக்கல் செய்வதற்கான காலகட்டம் டிசம்பர் 17 ஆம் நாள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தற்போதைய பதவிக் காலம் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முன்பாகவே தேர்தல்களை நடத்தத் தீர்மானித்துள்ளார்.


தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், ஓய்வுபெற்றுள்ள இராணுவ படைகளின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக விளங்குவர் என்று தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும், அவரது ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவை ஆதரிக்கவும் முடிவு செய்துள்ளார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 2008 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதன்படி ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

மூலம் தொகு