இலங்கையில் 'நிலம்' புயல் தாக்கியதில் பெரும் வெள்ளப்பெருக்கு

புதன், அக்டோபர் 31, 2012

'நிலம்' என்று அழைக்கப்படும் வெப்பவலயப் புயல் இலங்கையின் பல பகுதிகளைத் தாக்கியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 4,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். இப்புயல் தற்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது இன்று புதன்கிழமை இரவு இந்தியாவில் தரை தட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என முன்னர் கருதப்பட்டிருந்தாலும், இப்புயல் தற்போது தமிழ்நாட்ட நோக்கி நகர்வதால் இங்கு பெரும் அழிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமையகம் தெரிவித்துள்ளது. மக்களை வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.


100 கிமீ/மணி வேகத்தில் நிலம் புயல் தமிழ்நாட்டின் நாகைப்பட்டினம் மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டக் கரையோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.


இலங்கையின் வன்னியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 6,497 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


மூலம் தொகு